தஞ்சாவூர்: அதிநவீன என்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையின் மூலம் 40 வயது ஐடி பணியாளருக்கு நடமாட்டத்திறனை மீண்டும் வழங்கி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
முதுகுத்தண்டு வட்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பினால் கடுமையான வலியும், நடப்பதில் சிரமமும் அவருக்கு ஏற்பட்டது. • ‘யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி’ (UBE) என்பது, ஊசித்துளை மூலம் செய்யப்படும் ஒரு நவீன முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையாகும். சிறிய துளைகள் மூலம் நரம்பு அழுத்தத்தை நீக்கி, தசை பாதிப்பையும், ரத்த இழப்பையும் குறைக்கும் இச்சிகிச்சையினால் நோயாளி விரைவாக குணமடைய முடியும்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த ‘UBE’ எனப்படும் அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 40 வயதான நபர் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளார். முதுகுத்தண்டு நரம்புகள் கடுமையாக நசுக்கப்படுவதால் ஏற்படும் ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ என்ற தீவிர பாதிப்பால் இவர் கடுமையான வலியால் நடக்க இயலாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சில நாட்களிலேயே இவரால் மீண்டும் நடக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து இப்போது அவர், தனது பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.
காவிரி டெல்டா பிராந்தியத்தில் மீனாட்சி மருத்துவமனையால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த UBE முறை, நரம்பை அழுத்தும் முதுகுத்தண்டு வட்டை அகற்றுவதற்கு குறைந்த ஊடுருவல் உள்ள ஒரு நவீன அறுவை சிகிச்சை உத்தியாகும். இந்த முறையில் 1 செ.மீக்கும் குறைவான இரண்டு சிறிய துளைகள் மட்டுமே இடப்படும். பிரத்யேக எண்டோஸ்கோப்பிக் கருவிகள் மூலம் பாதிக்கப்பட்ட வட்டுப் பகுதி அகற்றப்படும். ஒரே துளை வழியாக இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட வட்டுகளுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
வழக்கமான திறந்தநிலை அல்லது மைக்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, இந்த முறையில் தசை பாதிப்பு மிகவும் குறைவு. ரத்த இழப்பும் குறைவாகவே இருக்கும். மருத்துவமனையில் சில நாட்கள் மட்டுமே தங்கி சிகிச்சை பெற்றால் போதும். நோயாளி விரைவாக குணமடைவதோடு, அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலியும் மிகக் குறைவாகவே இருக்கும். மீனாட்சி மருத்துவமனை இதுபோன்று முதுகுத்தண்டு தொடர்பான பல்வேறு பாதிப்பு நிலைகளை குணப்படுத்த இதுவரை சுமார் 50 UBE அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது.
முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் தலைமையிலான அறுவை சிகிச்சை குழுவால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, மேலும் இந்த குழுவில் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அரி மாணிக்கம், எலும்பியல் ஆலோசகர் டாக்டர் சண்முக ஹரிஹரன் ஆகியோர் அடங்குவர்.
இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் கூறுகையில், “இப்பிராந்திய மக்களுக்கு இந்த UBE சிகிச்சை முறை ஒரு மிகப்பெரிய வரமாகும். இரண்டு சிறிய துளைகள் மூலம் செய்யப்படும் இந்த நவீன சிகிச்சை மூலம், சிக்கலான முதுகுத்தண்டு பிரச்சனைகளையும் எளிதாக சரிசெய்ய முடியும். இதனால் தசைகள் பாதிக்கப்படாது. ரத்த இழப்பும் குறைவாக இருக்கும் மற்றும் நோயாளி வேகமாக குணமடைந்து விரைவில் வீடு திரும்பலாம். சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்கும் இந்த அதிநவீன சிகிச்சையை இப்போது நாங்கள் இங்கு வழங்கி வருகிறோம்.” என்று கூறினார்.
“அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரைவாக இயக்கத்திறனைப் பெறுவதும், அவர்களின் உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் மிகவும் திருப்தியளிக்கிறது. இந்த நவீன எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை முறையின் பாதுகாப்பையும், திறனையும் சிகிச்சை முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முதுகுத்தண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும், அவர்கள் விரைவாக குணமடைவதிலும் இதுபோன்ற அதிநவீன எண்டோஸ்கோப்பிக் சிகிச்சைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வசதி தற்போது டெல்டா பகுதியிலேயே கிடைப்பதால், நோயாளிகள், முதுகுத் தண்டுக்கான சிறப்பு சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று டாக்டர் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.
இதில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரவீன், எலும்பியல் துறைத் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் பார்த்திபன் எலும்பியல் ஆலோசகர் டாக்டர் பாலகுருநாதன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.