ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 27-ம் தேதி கடலுக்குச் சென்ற ஜெர்ஜிஸ் ஆண்டனியின் மோட்டார் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டிய மீனவர்களான கெர்ஜிஸ் அந்தோணி, இன்னாசி, பாலமுருகன், சவேரியார் அடிமை, ஆர்னால்டு, பாக்கியராஜ், ரஞ்சித், எபிராஜ், அந்தோணி சிசேரியன், முத்துகளஞ்சியம், கிறிஸ்துராஜா, ஆகிய 11 மீனவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் மீதான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு யாழ் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 11 மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்து ஊர்க்காவல் படை நீதிபதி நளினி சுபாஸ்கரன் நேற்று உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்கள் 11 பேர் தண்டனையோ அபராதமோ இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.