சென்னை: தர்பூசணிகளில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறையின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தர்பூசணிகளில் நிறம் மற்றும் சுவையை மாற்ற ரசாயனங்கள் செலுத்தப்பட்டதாகக் கூறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு வேளாண் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தோட்டக்கலைத் துறை அளித்த விளக்கத்தில், தர்பூசணிகளில் எந்த ரசாயனங்களும் செலுத்தப்பட்டதாக கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் வேண்டுமென்றே பொதுமக்களிடையே பொய்யான பிரச்சாரத்தைப் பரப்பியதாலும், தர்பூசணி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இழப்பீடு கோரிய விவசாயிகளின் மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.