சென்னை: தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மூலம் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட மதுபானங்களில் கலால் வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகமான கிடங்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் அக்கார்டு, எஸ்என்ஜே, கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், அவற்றின் தொழிற்சாலைகள், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், மதுவிலக்கு முன்னாள் இணை ஆணையர் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2 நாட்களாக நடந்த சோதனை, மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதே சமயம், ரெய்டு முழுவதுமாக முடிந்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அரசியல் சாசன அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை சந்தேகத்துக்குரியது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், டாஸ்மாக் குடோன், மதுவிலக்கு முன்னாள் இணை ஆணையர் வீடு உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அமலாக்கத் துறையின் சோதனை மற்றும் மிரட்டலுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம், வழக்கின் விசாரணையின் எல்லையைத் தாண்டி, உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மன உளைச்சலையும், கவலையையும் ஏற்படுத்துவதைக் கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.