மதுரை: மதுரையில் இன்று பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பெருங்கோட்டை பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பாஜக தலைவர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஊடகங்கள் மூலம் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக திருமாவளவன், சீமான், சித்தராமையா, கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசுவது கண்டனத்துக்குரியது. உலகளவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வழிநடத்தும் பெரும்பாலான அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றன.

அமெரிக்காவில் இருப்பவர்கள் குடியேறியவர்கள். ஆனால், அவர்களில் யாரும் அமெரிக்காவுக்கு எதிராக பேசவில்லை. ஆனால் இந்தியாவில் இருப்பவர்கள் தங்கள் நாட்டுக்கு எதிராக பேசுகிறார்கள். சட்டத்தை மதிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. இந்திரா காந்தி அரசியல் சட்டத்தை அழித்தபோது ப.சிதம்பரம் உடன் இருந்தார். திமுகவில் 2 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் தவித்து வருகிறார். திராவிட அரசியல் என்பது மதவெறி. திராவிட இயக்கங்கள் வெறுப்பு அரசியலின் மூலதனம். “முதல்வர் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது” என்று எச்.ராஜா கூறினார்.