சென்னை: பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய அரசு நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
அந்த தலைக்கவசங்களுக்கு செயல்திறன் தர மதிப்பீடும் உள்ளது. தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்து, சாலைப் பாதுகாப்பின் நோக்கத்தையே தோற்கடிக்கின்றன. இதை நிவர்த்தி செய்ய, 2021 முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் சான்றளிக்கப்பட்ட ISI முத்திரை குத்தப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது (IS 4151:2015).

2025 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 176 உற்பத்தியாளர்கள் ஹெல்மெட்டுகளுக்கான BIS உரிமங்களை வைத்துள்ளனர். சாலையோரங்களில் விற்கப்படும் பல ஹெல்மெட்டுகளுக்கு பிஐஎஸ் சான்றிதழ் இல்லை. இவை தரமற்றதாக இருக்கலாம் மற்றும் சாலை விபத்துகள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு பாதுகாப்பை வழங்காமல் போகலாம். எனவே, இந்த சிக்கலை தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
தரநிலைகளை அமல்படுத்த, பிஐஎஸ் அமைப்பு வழக்கமான தொழிற்சாலை மற்றும் சந்தை கண்காணிப்பை நடத்துகிறது. இதன் மூலம், தரமற்ற ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சந்தையில் இருந்து தரமற்ற ஹெல்மெட்களை அகற்றுவதன் மூலம், சாலை விபத்து இறப்புகளைத் தடுப்பதையும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.