
சென்னை கழிப்பட்டூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டத்தின் கீழ் புதிய சதுப்பு நிலக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி கடந்த ஆண்டு தமிழக வனத்துறை மேற்கொண்டதுடன், 12,500 மரக்கன்றுகள் நடும் பணிகள் இடம்பெற்றன. இந்த மரங்கள் மாங்குரோவ் வகையைச் சேர்ந்தவை. சதுப்பு நில மரங்கள் வளர இந்த பகுதியில் 87 கால்வாய்களில் விதைகள் தூவப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இதற்காக 80 விநியோக கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காடுகள் ஏழு மீன் முள் வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

சென்னை கடலோர மாவட்டம் என்பதால், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த மரங்கள் உதவுகின்றன. பல்லுயிர் சமநிலையை பராமரிப்பதற்கும் இது முக்கிய பங்காற்றும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
மாங்குரோவ் காடுகள் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடற்கரைகளில் வளரக்கூடியவை. கடல் நீரில் உப்பு கலந்திருப்பினும் வளரக்கூடிய திறன் மாங்குரோவ் மரங்களில் உண்டு. இவை கடலோர பகுதிகளில் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழும்போது அலையின் சீற்றத்தை குறைக்கும் சக்தி உடையவை.
மேலும், இந்த மரங்கள் மணல் அரிப்பைத் தடுக்கும் திறனும் கொண்டவை. கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடமாகவும் செயல்படுகின்றன. ஆற்றின் முகத்துவாரங்களில் வளரக்கூடிய இவை, மீன்கள், நத்தைகள், நண்டு உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
இந்த வகை மாங்குரோவ் காடுகள் இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகள் இதற்காக பிரசித்தி பெற்றவை.
புதுச்சேரியிலும் தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம், காக்காயந்தோப்பு, நல்லவாடு பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் பரந்து காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது இந்த மரங்கள் கடலலைகளின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பெரிதும் பயன்பட்டன. தற்போது, வனத்துறையின் இந்த புதிய திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.