திருவள்ளூர்: தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழை செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டையில் மிதமாகவும், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, சோழவரம், பொன்னேரி, பூந்தமல்லி, திருவாலங்காடு, திருவள்ளூர், ஆவடியில் மிதமாகவும், திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பூண்டி, ஜமீன் கொரட்டூர்.
இந்த மழையால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு மழைநீர் வரத்து வினாடிக்கு 595 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 360 கன அடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 225 கன அடியாகவும், சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 30 கன அடியாகவும் உள்ளது.

மேலும், பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 135 கன அடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடியாகவும், ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 420 கன அடியாகவும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 3,058 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,455 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,075 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 172 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.