தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வுக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம், செப்டம்பர் 9, 2021 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உயிர் வேதியியல் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த இந்திரா, தேர்வு நடைமுறைகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார், ஆனால் அவர் விண்ணப்பித்த பதவி இறுதி அறிவிப்பில் சேர்க்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பையும் நியமனத்தையும் ரத்து செய்யக் கோரி இந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, மாணவர்கள் இல்லாததால் உயிர் வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அரசு கூறியது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பாடத்தை நடத்த மாணவர்கள் இருக்க வேண்டும். மனுதாரர் காலியாக உள்ள இடங்களுக்கு பாடத்தை நடத்த முடியாது. எனவே, மாணவர்கள் இல்லாத பாடத்திற்கு ஆசிரியரை நியமிக்க உத்தரவிட முடியாது என்பதால் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறினர்.