சென்னை: சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு ஒன்றில், ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும், கல்வெட்டையும் அகற்ற உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்., ஸ்ரீராம் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை அரசு வக்கீல் ஜெ.ரவீந்திரன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களை, ஏப்., 21-க்குள் அகற்ற வேண்டும். இதை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து, வழக்கை முடித்துக் கொள்ளலாம்.