
திருப்பூரில் இருந்து புறப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் பயணத்தில் பயணிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் கூட முன்பதிவில்லாத பயணிகள் அனுமதியின்றி ஏறிவிடுவதை மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் ரயில் நிலையத்தில், முன்பதிவு செய்யப்பட்ட ஏசி பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் தங்களாகவே புகுந்து உட்கார்ந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒரு பயணி கதவை தாழிட்டதால், ஒருவர் ஜன்னல் வழியாக எகிறி உள்ளே சென்று வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் மக்கள் பாதுகாப்பாகவும் குறைந்த செலவில் பயணிக்க ரயிலையே விரும்புகிறார்கள். குறிப்பாக குடும்பத்தோடு நீண்ட தூரம் பயணிக்கவும் ரயில்வே சேவை முக்கியமாகின்றது. இந்திய ரயில்வே ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் பயணிக்க வைக்கும் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும்.
இருப்பினும் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மிகவும் குறைவாகவே உள்ளதால் கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. பயணிகள் இடமின்றி வேதனைப்படுகிறார்கள். இதனால் பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளையே ஆக்கிரமிக்கிறார்கள். இது ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு மிகுந்த அவலத்தை ஏற்படுத்துகிறது.
வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்துக்கு பெரிதளவில் வருவதால் அவர்களுக்கான தனி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிலர் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், முன்பதிவில்லாத முழு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் முன்பதிவுள்ள பெட்டிகளில் அனுமதியின்றி பயணிகள் புகுந்தால், பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதே போல சில சமயங்களில் அவர்கள் குழுவாக சேர்ந்து மோதலில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வருகின்றன.
திருப்பூரில் இது தொடர்பாக ஏற்பட்ட சம்பவம் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்தை பெற்றுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைக் காலமே பதிலளிக்க வேண்டும்.