ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் குறைவான படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

இதன் காரணமாக மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர அவசரமாக அறுத்துக்கொண்டு கரைக்கு திரும்பினர். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை சிறிதளவு மீன்களுடன் கரை திரும்பினர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 700-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ள ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையால் பயந்து குறைந்த எண்ணிக்கையிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.