சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான (TNEA 2025) மாணவர் விண்ணப்பங்கள் வரும் மே 7ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் ஜூன் 6ஆம் தேதி வரை மட்டுமே பெறப்படும்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றன. இந்த தேர்வுகளை தமிழகமும் புதுச்சேரியும் சேர்த்து 8.51 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். தனித்தேர்வர்களாக 23,747 பேர் கலந்து கொண்டதால் மொத்தம் 8.75 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலமாக https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு மே 7ஆம் தேதி காலை 10 மணிக்கு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைக்கிறார்.
மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படும். இந்த பட்டியல் ஜூலை இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும். தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கான கல்லூரி மற்றும் பிரிவுவாரியான கட் ஆஃப் விவரங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன, இது மாணவர்களுக்கு படிப்பு தேர்வில் உதவியாக இருக்கும். கலந்தாய்வு ஜூலை இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.