சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான வீட்டு மனை திட்டத்தில் சேர, ஏப்., 20-க்குள் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய, கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, பல்லவன் போக்குவரத்து கழக கூட்டுறவு வீட்டு வசதி கட்டுமான சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சங்க உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில், செங்கல்பட்டு மாவட்டம், கீழ்வலம் கிராமத்தில், மனை திட்டம் செயல்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் தேவைக்கேற்ப, 600 சதுர அடி ரூ. 2.07 லட்சத்தில் இருந்து 2,400 சதுர அடியில் ரூ. 8.28 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மனைக்கான தொகையை உடனடியாக செலுத்தி, ஏப்ரல் 20-ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

9 சதவீத முத்திரை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 044 2536 0144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, 2024-25-ம் ஆண்டுக்கான வட்டித் தொகை சங்க உறுப்பினர்களுக்கு வங்கி மூலம் நாளை வரவு வைக்கப்படும் என பெருநகர போக்குவரத்துக் கழக ஊழியர் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் அறிவித்துள்ளது.