காமன்வெல்த் போட்டிகளில் 4 தங்கம் பதக்கம் பெற்ற மாணவருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
வேலூர்: குடியாத்தம் ஒன்றியம் சீவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. ஆசிய பாடிபில்டர். இவரது மகன் ஜெயமாருதி (வயது 18). வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த நவம்பரில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-ஜூனியர் 74 கிலோ உடல் எடைப் பிரிவில் பங்கேற்று மொத்தம் 635.5 கிலோ எடையை தூக்கி 4 தங்கப் பதக்கங்களை வென்றார். அவரை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார்.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் 4 தங்கப்பதக்கம் வென்ற ஜெயமாருதியின் வீட்டிற்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேரில் சென்று சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சேகர், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.