காஞ்சிபுரம்: இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் 5,100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும். ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால், அந்த கிராமத்தை மையப்படுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றிக் கட்சி தலைவர் விஜய் தீர்மானம் நிறைவேற்றினார்.
இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க முடிவு செய்தார். ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் விஜய் சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய காவல்துறையிடம் போராட்டக் குழுவினர் அனுமதி கோரினர். ஆனால் விஜய்யின் பாதுகாப்பை காரணம் காட்டி காவல் துறை அனுமதி மறுத்தது. தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதற்கு போராட்டக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், ஏகனாபுரத்தில் இருந்து 7 கி.மீ., துாரம் பொதுமக்கள் வர வேண்டும் என்பதற்காகவும் போலீசார் இவ்வாறு செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழையால், அம்பேத்கர் சிலை அருகே, போராட்டக் குழுவினர் திட்டமிட்டிருந்த பகுதி, சகதியாக மாறியது. இதையடுத்து விஜய் பங்கேற்கும் கூட்டத்தை பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்த போராட்டக்குழுவினர் முடிவு செய்தனர். போலீஸ் அனுமதியுடன் விஜய் பங்கேற்கும் கூட்டத்தை அவர்கள் சொன்ன திருமண மண்டபத்தில் நடத்த திட்டமிட்டனர்.
இருப்பினும், திரண்டிருந்த இடத்தை சீரமைத்து, அம்பேத்கர் சிலை அருகே உள்ள மைதானத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் வலியுறுத்தினர். சுற்றுவட்டார 13 கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கூடுவதற்கு மைதானம்தான் சரியான இடம் என்ற கருத்தும் தவெக நிர்வாகிகள் மத்தியில் நிலவியது. இதைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், காவல் துறையினர், போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இறுதியாக போலீசார் அனுமதி வழங்கியதையடுத்து, அம்பேத்கர் சிலை அருகே உள்ள மைதானத்தில் விஜய் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.