வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவும், முஸ்லிம் வக்ஃப் (ரத்து) மசோதாவும் இந்தியக் கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அந்தத் திருத்தம் அமலுக்கு வந்தது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல், இந்த மசோதாவை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதே போல் தவெக தலைவர் விஜய்யும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னதாக, இந்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வக்பு உரிமைச் சட்டத்திற்கான போராட்டத்தில் முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து தவெகவும் பங்கேற்போம்” என்று கூறியிருந்தார். அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தில் விஜய் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.