சென்னை: அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அரசு அனுமதி பெற வேண்டும். இப்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு இந்த விதியில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் தொழில்சார் மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு அனுமதி பெறத் தேவையில்லை.

ஆனால், உரிய நேரத்தில் உரிய அதிகாரிக்குத் தெரிவித்து புத்தகங்களை வெளியிடலாம். புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும் அல்லது தாக்குதலும் இல்லை என்பதையும், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரை அல்லது உள்ளடக்கம் புத்தகத்தில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தும் சுய அறிவிப்பையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ராயல்டி பெறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். புத்தக விற்பனையை ஊக்குவிக்க அரசு ஊழியர் தனது அலுவலக நேரத்தையோ பதவியையோ பயன்படுத்தக் கூடாது. புத்தகம் அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை எதிர்க்கக் கூடாது, சமூக நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.