புதுடில்லி: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா, தங்களது வருங்கால செயல்பாடுகள் அரசின் நிதி ஆதரவைப் பொறுத்து உள்ளது எனத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2026ம் நிதியாண்டுக்குப் பின் நிறுவனத்தின் இயங்கும் நிலை முற்றிலும் பாதிக்கப்படும் என்று வோடபோன் ஐடியா சுட்டிக் காட்டியுள்ளது.

இந்நிறுவனம் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வங்கிகளிடம் இருந்து கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டு வைத்திருந்த முதலீடுகள் இழுபறியாகி விட்டதாகவும் கூறியுள்ளது. தற்போது நிலுவையில் உள்ள ஏ.ஜி.ஆர். தொகை தொடர்பாக சுமார் ரூ.30,000 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டுமென, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிக்குள், நிறுவனம் கடந்த 12 மாதங்களில் முயற்சி செய்த நிதி திரட்டல் முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. ஏற்கனவே அரசு பங்காளியாக இணைந்துள்ள நிலையில் கூட, நிலுவைத் தொகையின் பாரம் நிறுவனம் மீது பெரிதும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வோடபோன் ஐடியா தன்னுடைய நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரம் சொத்துகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம் எனவும், அது நடைமுறைப்படுத்தப்பட்டால், கிட்டத்தட்ட 2 கோடி வாடிக்கையாளர்கள் சேவைத் தடையை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும், சரியான அரசின் ஆதரவு வழங்கப்படவில்லையெனில், வோடபோன் ஐடியா தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாமல், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (NCLT) நாட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், 30,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக பணியாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், வோடபோன் ஐடியாவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஏர்டெல் தனது மனுவில், ஏ.ஜி.ஆர். நிலுவைத் தொகை நிறுவனத்தின் சேவை செயல்பாடுகளையும், நெட்வொர்க் விரிவாக்கத்தையும் பெரிதும் பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் தினசரி அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ள நிதி ஆதரவு இன்றி இயங்க இயலாது என்றும், இந்த நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்யாத சூழலில், தனிநபர் நிறுவனங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய தொலைத்தொடர்பு துறையின் எதிர்காலமே கேள்விக்குறியாகுமெனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு துறையின் தற்போதைய நிதிசார்ந்த சிக்கல்கள், அரசின் தளர்வுகள் இல்லையெனில், வருங்காலத்தில் பெரும் நிறுவனங்களை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.