மைசூரு சாமுண்டி மலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து
மைசூர்,
மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் குஜராத் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கலாச்சாரத்தின் நகரம் மற்றும் அரண்மனை நகரம் என்று அழைக்கப்படும் மைசூர், கர்நாடகாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த 50 பேர் சுற்றுலா பேருந்தில் மைசூருவுக்கு வந்தனர்.
நேற்று காலை பஸ்சில் சாமுண்டி மலைக்கு சென்றனர். அப்போது திடீரென பேருந்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு, பயணிகளை அவசரமாக கீழே இறக்கினார். பஸ்சில் இருந்து அனைவரும் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. 50 பேர் உயிருடன் தப்பினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்து புகை வந்ததால், டிரைவர், பயணிகளை இறக்கி, அதிர்ஷ்டவசமாக, 50 பேர் உயிருடன் தப்பினர். போலீசார் நடத்திய விசாரணையில், டீசல் கசிவால் பஸ் தீப்பிடித்தது தெரியவந்தது. இது குறித்து சாமுண்டி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.