கோவையில் கார் வெடித்த வழக்கு… ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகளுக்கு அனுமதி
சென்னை,
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முகமது அசாருதீன், அப்சார் கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பரூக் மற்றும் பைரோஸ் கான் ஆகிய 5 பேரை ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், போலீஸ் காவலில் உள்ள முகமது தல்லா, முகமது ரியாஸ், நவாஸ், முகமது தௌபிக், ஷேக் இரிதாதுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரையும் விசாரிக்க பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், 6 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி அனுமதி அளித்தார். 6 பேரையும் வரும் 17ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.