ஆகஸ்ட் 1, 2025 முதல், Unified Payments Interface (UPI) சேவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் UPI சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சேவை தடைகளால், பயனர்கள் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், இந்த மாற்றம் அமையப்பட்டுள்ளது.

முன்னாள் நடைமுறையில், பலரும் தங்கள் வங்கி இருப்புகளை தொடர்ந்து பலமுறை சரிபார்த்து வந்தனர். இது வங்கி செயலிகளின் செயல்திறனை பாதிப்பதுடன், UPI பிணையத்துக்கும் சுமை ஏற்படுத்தியது. இந்நிலையில், NPCI, UPI சேவைகளில் ‘non-financial’ வகையான நடவடிக்கைகள் — குறிப்பாக வங்கி இருப்பு பார்வை மற்றும் கணக்கு இணைப்புகள் போன்றவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, ஒரு செயலியில் ஒரு பயனர் ஒரே நாளில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே வங்கி இருப்பைப் பார்வையிட அனுமதி பெறுவார். பயனரிடம் இரண்டு செயலிகள் இருந்தால், மொத்தமாக 100 முறை மட்டுமே இந்த வசதி வழங்கப்படும். மேலும், வங்கிக் கணக்குகளை மொபைல் எண்ணுடன் இணைத்துப் பார்வையிடும் எண்ணிக்கையும் நாளைக்கு 25 முறையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
UPI பரிவர்த்தனையின் நிலையை சரிபார்ப்பது Google Pay, PhonePe, Paytm போன்ற NPCI அங்கீகரித்த சேவை வழங்குநர்களுக்கே மட்டும் செல்லும். மற்ற செயலிகள் அல்லது சேவை வழங்குநர்கள் இந்தச் சோதனை வசதியைப் பெறமுடியாது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பயனர்களின் பாதுகாப்பையும், செயல்திறனையும் அதிகரிக்கவே மேற்கொள்ளப்படுகின்றன. NPCI, அனைத்து UPI செயலிகளுக்கும், தொழில்நுட்ப குறைகளை சரிசெய்து, ஆகஸ்ட் 31, 2025க்குள் முழுமையான செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் செயலிகளுக்கு அபராதம், தற்காலிக சேவை தடைகள் மற்றும் புதிய பயனர்களைச் சேர்க்க தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதால், UPI சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர், தேவையின்றி வங்கி இருப்பை சரிபார்க்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். புதிய விதிகளைப் புரிந்து, தேவையான சமயங்களில் மட்டுமே சேவையைப் பயன்படுத்துவது மூலமாக, பண பரிவர்த்தனைகள் குறைவான சிக்கலுடன் தொடர இயலும்.
இதன் மூலம், பயனர்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவம் வழங்கும் நோக்கம் அடையப்படுகிறது. UPI சேவையின் செயல்திறனை மேம்படுத்தும் இந்த முயற்சி, இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.