கர்நாடகா: கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனினும், இது லேசான அளவிலேயே பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் 257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லி, மராட்டியம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து உள்ளது. கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பெங்களூரு நகரில் 32 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்ததுடன், சுவாச கோளாறுகளும் இருந்துள்ளன. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன. அதில், அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை சுகாதார மற்றும் குடும்ப நல துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், இன்று முதல் மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ள தகவல் வெளிவந்துள்ளது.