திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், 3ம் நாள் நிகழ்ச்சியாக சைவ அடியார்களாகக் கூறப்படும் 63 நாயன்மார்களின் பாதயாத்திரை நடைபெறுகிறது. அதன்படி, வேதகிரீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கிரிவலப்பாதையை வலம் வந்தது.
பின்னர் வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்து கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்நிலையில் பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான 7ம் நாள் தேரோட்டம் வரும் 01.05.2023 அன்று நடைபெற உள்ளது. 04.05.2023 அன்று சங்கு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற இருக்கிறது. விழாவில் ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.