May 3, 2024

சிவராத்திரியையொட்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி… வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

கோவை,

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலை மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளியங்கிரியின் 7வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சுயம்பு லிங்கத்தை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி நாட்களில் 7 மலைகளில் ஏறிச் செல்கின்றனர்.

பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த காடாக உள்ளது. இந்நிலையில், மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே வெள்ளியங்கிரி மலையில் ஏற அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி ஆகிய 2 பண்டிகைகளுக்கு மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது சிவராத்திரி விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 20ம் தேதி வரை 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களை மலையில் வீசுவதை தடுக்க புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

அதன்படி பக்தர்கள் மலைக்கு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலில் ரூ.20 வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலையிலிருந்து இறங்கும் போது பக்தர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை வனத்துறையினரிடம் கொடுத்து ரூ.20 திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பாட்டில்களை காட்டுக்குள் வீசுவது தடுக்கப்படும். எனவே பக்தர்கள் மலையில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!