தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேயராக இருந்து மனத்திருப்தியுடன் மக்கள் பணிகளை சிறப்புடன் நிறைவேற்றி தந்துள்ளேன். அதேபோல் சட்டமன்றத்தில் தஞ்சை மக்களின் குரலாக எதிரொலிப்பேன் என்று தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மேயர் சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு செல்லும் இடமெல்லாம் சான்றோருக்கு சிறப்பு என்பதை போல் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். காலை முதல் இரவு வரை அனல் கிளப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்திற்கு இடையில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

கட்சி பணிகளில் தொடங்கி 3 முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டேன். பின்னர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேயரான நாள் முதல் தஞ்சையை மிளிர வைக்க வேண்டும் என்பதுதான் எனது தீராத ஆசை. அதை நிறைவேற்றியும் காட்டி விட்டேன். முக்கியமாக மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக முடிப்பதுதான் முதல் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டோம். அதன்படி சாலைகள், குடிநீர், மருத்துவம் போன்றவற்றை முக்கியமாக நிறைவேற்றுவது என்று உறுதி கொண்டு செயல்பட்டேன். அதை மனத்திருப்தியுடன் முடித்துள்ளேன்.
பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி சீராக விநியோகம் செய்வதற்காக தஞ்சாவூர் மாநகராட்சியின் 6 இடங்களில் ரூ.4.80 கோடியில் 01.10.2022 அன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான மானம்புச்சாவடியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு ரூ.25 இலட்சத்தில் புதிய கட்டிடம் கட்டிதருவதற்கு உறுதியளிக்கப்பட்டு 11.10.2022 அன்று அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாத சூழ்நிலையை உருவாக்குவதற்காக பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட 1400 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 29.10.2022 அன்று நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பார்க்கும் வசதி செய்யப்பட்டது.

தஞ்சாவூரின் மைய பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சிக்கு சொந்தமான ரூ. 75 கோடி மதிப்பில் உள்ள கட்டிடம், நிலம் மீட்கப்பட்டு அதன்பிறகு இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என 10.11.2022 அன்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.20.26 கோடி மதிப்பில் புதிப்பித்து பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட காமராஜர் மார்க்கெட் (காய்கறி மார்க்கெட்) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் 23.11.2022 அன்று திறந்து வைத்தார்.
கல்லணைக் கால்வாயில் கரைகளில் கொட்டப்பட்ட தஞ்சை குப்பைகளை அகற்றுவதற்கு நான்கு குழுகளாக பிரிக்கப்பட்டு சுமார் 3 டன் எடை கொண்ட குப்பைகளை 16.12.2022 அன்று அகற்றப்பட்டன. தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி சின்னையாபிள்ளை தெருவில் ரூ.25 இலட்சம் செலவில் நகர்புற சுகாதார நலவாழ்வு மைய கட்டிடம் 19.01.2023 அன்று திறக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் 01.03.2023 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
2021-2022 ம் ஆண்டிற்கான நகர்புற சாலை திட்டத்திற்கான சாலைகள் அமைக்கும் பணி தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 வார்டுகளில் ரூ. 1 1/2 கோடி மதிப்பீட்டில் தார் சாலை 04.03.2023 அன்று அமைக்கப்பட்டது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மைதானத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பில் உள்ள தஞ்சாவூர் மாநகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 1200 மீட்டர் தூரத்திற்கு நடைபாதையும், 750 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை உட்பட பல திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேயராக இருக்கும் போது செய்யப்பட்ட பணிகளின் பட்டியல் இன்னும் உள்ளது. தற்போது தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். நான் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தஞ்சை மக்களின் குரலாக எதிரொலிப்பேன். கொடுக்கும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்ற பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.