திராவிட மாடல் இத்துப்போன மாடல்… சீமான் ஆவேசம்
சென்னை: திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல். ஆளுநர் கூறியது சரிதான் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அயோத்திதாசரின் 109வது நினைவு தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழுக்கு தனிப் பெருமை இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் வரலாற்றுப் போராளிகளின் பெயர்களை மறைத்து இந்த திராவிட மாதிரி அரசு செயல்படுகிறது. தமிழர்களின் பெருமையும் தனித்துவமும் திராவிட ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது. சமாதி கட்டுவது, பேனா வைப்பது, பள்ளிக்கூடங்களை சீரமைக்க மக்களிடம் கையேந்துவது இதுதான் திராவிட மாடல்.
திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல் தான். கவர்னர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தில் வெளியாகி உள்ள கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறோம். திரையரங்கில் முன்னால் போராடினால் தமிழக அரசால் என்ன செய்ய முடியும். தமிழகத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாகக் கூறி அவர்களுக்கு எதிரான திரைப்படம் வெளியிடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பாஜகவின் வளர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. ஒன்றுமே இல்லாத பாஜகவை ஒற்றுமையாக்கியது திமுக. ஹெச்.ராஜா, லட்சுமணன் போன்றவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியது திமுக தான். தொழிலாளர் நலச் சட்டத்தை அவசர அவசரமாக திமுக கொண்டு வந்ததன் காரணம் என்ன? பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட கொண்டு வரவில்லை. அவசர அவசரமாக சட்டத்தைக் கொண்டு வந்து பின்னர் திரும்ப பெற்றது ஏன்’ என்று தெரிவித்தார்.