வருமான வரித்துறையைக் கொண்டு தி.மு.கவை அச்சுறுத்த முடியாது… உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, இந்த நிறுவனத்துடன் திமுக தலைமை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்திலும், சென்னை நீலாங்கரையில் உள்ள ஜி ஸ்கொயர் இயக்குனர் பாலா வீட்டிலும் அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் ஜி ஸ்கொயர் பங்குதாரர்களாக இருந்தனர்.
தி.மு.கவை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக அரசியல் களத்தில் பேசப்பட்டது. இந்தநிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘வருமான வரித்துறை சோதனை நடத்துவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தகர்த்தெறிந்துவிட்டு பணியாற்றி வருகிறோம். ஐ.டி.ரெய்டுகளுக்கெல்லாம் அஞ்சமுடியாது. திமுகவை யாரும் வாழ்த்துவது இல்லை, குற்றச்சாட்டு மட்டுமே கூறி வருவதாகவும் உதயநிதி குறிப்பிட்டார்.