பெண்கள் உலகக் கோப்பை… இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
கெபெஹா,
10 அணிகள் மோதும் 8வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) கெபெஹா நகரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்தை (குரூப் பி) எதிர்கொள்கிறது.
இந்திய அணி முந்தைய லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகளை துவம்சம் செய்தது. அதேபோல் இங்கிலாந்து அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தியது. பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாக இருக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான இந்த மோதலானது இந்தியாவுக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளும் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் இருப்பதால், இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19ல் இங்கிலாந்தும், 7ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
20 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதிய 5 முறை இதில் அடங்கும், அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரவு 10.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில், மெக் லானிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, சன் லூஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை (குரூப் ஏ) சந்திக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.