இங்கிலாந்து: இங்கிலாந்தில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகம் மூடப்படும் சூழலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லண்டன், ரீஜெண்ட் தெருவில் உள்ள இங்கிலாந்தின் மிகப் பழமையான இந்திய உணவகமான வீராஸ்வாமி மூடப்படுவதைத் தடுக்கக் கோரி, மன்னர் சார்லஸுக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மனு கொடுத்துள்ளனர்.
1926-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த உணவகம், அடுத்த மாதம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. உணவகத் துறையில் மிச்செலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டடத்தின் உரிமையாளரான கிரவுன் எஸ்டேட் நிறுவனம், உணவகத்தின் குத்தகையை புதுப்பிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, அந்த உணவகம் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, சர்ச்சில், சார்லி சாப்ளின், சரோஜினி நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த உணவகத்துக்கு வந்து சென்றுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகத்தைக் காப்பாற்றக் கோரி, உணவக உரிமையாளர்கள் உள்பட 20,000-க்கும் மேற்பட்டோரின் கையெழுத்து அடங்கிய மனு மன்னர் சார்லஸிடம் வழங்க பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
குத்தகை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை உணவகம் இயங்கும் என கூறப்படுகிறது.