டெல் அவிவ்: காஸா போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிப்பதும், அதற்கு ஈடாக இஸ்ரேலால் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதும் நாளை முதல் நடைபெறவுள்ளது.
எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள முதல் ஆறு வாரங்களுக்கு இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, மூன்று கட்டங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும். அப்போது ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்கள் அடங்குவர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பு இந்த காலப்பகுதியில் 737 பாலஸ்தீனியர்களை விடுவிக்கவுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்டின் முக்கிய தலைவரான புஷ்ரா அல்-தவில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஃபத்தா இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய விடுதலைப் பட்டியல்கள் தயாரான நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணிக்கு இரு தரப்பிலும் இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் எனத் தெரிகிறது. அக்டோபர் 7, 2023 அன்று, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதில் 46,700-க்கும் அதிகமானோர் காஸாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து, இருப்பிடம் போன்றவற்றுக்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம், போர்நிறுத்த ஒப்பந்தம் ஆகியன கைச்சாத்திடப்பட்ட போதிலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிற்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 உடல்கள் வந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.