இஸ்ரேல்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 182 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போரிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒத்துக்கொண்டதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் படைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவியுள்ளன. இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், பெய்ரூட் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெறும் 10 நிமிடங்களுக்குள் பெய்ரூட்டில் 100-க்கும் அதிகமான இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனவும், அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் இணைக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.