அமெரிக்கா: அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுத்தமையே நோய் பரவலுக்கு காரணமென அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், தட்டம்மை தடுப்பூசி செலுத்தாமலிருந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் இருமல் மூலம் பரவக்கூடிய தட்டம்மை நோய் குழந்தைகளை எளிதாக தொற்றிக்கொள்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்குப் பின் தட்டம்மை நோயால் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.