வாடிகன்: அபாய கட்டத்தை தாண்டி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார் போப் பிரான்சிஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த மாதம் 14-ந் தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்படும் போப் பிரான்சிசுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமானது. தொடர் சிகிச்சையின் பலனாக போப் பிரான்சிசின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அவர் அபாய கட்டத்திலேயே இருப்பதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்றுடன் 2 வாரங்கள் ஆன நிலையில், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே போப்பின் உடல்நிலையில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா அல்லது அவரது உடல்நிலை மீண்டும் சீரானவகையில் திரும்பியுள்ளதா என்பதைத் தீர்மானிக்க 24-48 மணிநேரம் தேவை என்று வாடிகன் தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது போப் விழிப்புடன் இருக்கிறார் என்றும், நல்ல மனநிலையில் இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.