நியூயார்க்: பூமிக்கு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதை திட்டமிட்டபடி நடத்தி காட்டி உள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர்களால் திட்டமிட்டபடி கடந்த செப்டம்பர் மாதம் பூமிக்கு திரும்ப முடியாமல்போனது.
தொடர்ந்து, அவர்களை பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா கைகோர்த்தது. அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ரக ராக்கெட், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட்டில் 4 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், 29 மணிநேர பயணத்திற்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த 4 வீரர்களையும் அங்கிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சக விண்வெளி வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 4 பேரும் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ள நிலையில், சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகிய இருவரும், அடுத்த சில நாட்களில் பூமிக்கு அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.