ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) எமிரேட்ஸ் டிரா என்ற லாட்டரியை நடத்தும் நிறுவனம் டைகர்ஸ் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் மெகா 7 கேம் என்ற லாட்டரி டிராவை நடத்தியது. இதில், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீராம் ராஜகோபாலன் பங்கேற்று முதல் பரிசான சுமார் ரூ.230 கோடி (அமெரிக்க டாலர் 27 மில்லியன்) வென்றார். இது ஒரு ஆன்லைன் லாட்டரி விளையாட்டு. சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார்.
மார்ச் 16 அன்று நடைபெற்ற லாட்டரியில் பங்கேற்றபோது அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது. ஸ்ரீராம் ராஜகோபாலன் கூறுகையில், “லாட்டரியில் இவ்வளவு பரிசு வென்றதாகச் சொன்னபோது, முதலில் நான் அதை நம்பவில்லை. இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது எனக்கு பயமும் மகிழ்ச்சியும் கலந்த கலவையைத் தருகிறது. பரிசு கிடைத்ததில் 70 சதவீதம் மகிழ்ச்சி அடைகிறேன். 30 சதவீதம் பயம். இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு நான் இவ்வளவு பரிசை வென்றதில்லை.

இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல; இது என் குடும்பத்தினருக்கும், என் குழந்தைகளுக்கும், அனைத்து மாணவர்களுக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க கனவு காண்கிறார்கள். இப்போது இது வருங்கால சந்ததியினருக்கு செல்வத்தை உருவாக்க ஒரு வாய்ப்பு, ”என்று அவர் கூறினார். இதுகுறித்து, டைகர்ரோஸின் தலைமை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டியன் கூறுகையில், “எங்கள் லாட்டரியில் ரூ.230 கோடி வென்ற ஸ்ரீராம் ராஜகோபாலனுக்கு வாழ்த்துக்கள், இதன் மூலம் அவரது வாழ்க்கையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையும் மாறும்.
வளைகுடாவில் பிறந்த எங்கள் வெற்றி, இப்போது உலகளவில் விரிவடைந்து வருகிறது.” ஒரு எளிய, நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த ஸ்ரீராம் 1998-ல் சவுதி அரேபியாவிற்கு குடிபெயர்ந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அங்கு வசித்து வந்தார். அவர் சமீபத்தில் ஓய்வு பெற்று சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.