சென்னை: 2025-26 கல்வியாண்டிற்கான RTE சேர்க்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை:- கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டின் கீழ் இலவசக் கல்வியை உறுதி செய்கிறது.

கடந்த ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 20-ம் தேதி சேர்க்கை தொடங்கியது. இருப்பினும், இந்த ஆண்டு, மே மாதம் தொடங்கிய பிறகும், அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த தாமதம் சேர்க்கை செயல்முறையை பாதிக்கும். 2025-26 கல்வியாண்டிற்கான RTE விண்ணப்ப அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.
மேலும், விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் காலக்கெடு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெளிவாக புதுப்பிக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.