சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாளை நெல்லை- திருச்செந்தூர் இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06101) அதேநாள் காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து இதே தேதியில் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06102), அதேநாள் மதியம் 12.55 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த ரெயில்களில் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 2, படுக்கை வசதி பெட்டி 9, 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 4 மற்றும் உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.
இதேபோல, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06103), அதேநாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து இதேதேதியில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06104), நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.
இந்த ரெயில்களில் 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 10, உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 12 பெட்டிகள் இருக்கும்.இந்த ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்க நல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.