பாட்னா: ராகுல் காந்தி பீகாரில் 1,300 கி.மீ ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை மேற்கொண்டு வருகிறார், தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார். ஆகஸ்ட் 17-ம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடையும்.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் சிபிஎம்எல் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று சுபால் பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் இணைந்தார். இந்த யாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி, “பாஜக ஆட்சி 40 முதல் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமித் ஷா பலமுறை கூறியுள்ளார்.

அவர்கள் 40-50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்று அவருக்கு எப்படித் தெரியும்? இது ஒரு விசித்திரமான கூற்று. இன்று, அவர்கள் (பாஜக) வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்ற உண்மை நாட்டு மக்களுக்கு முன் வெளிவந்துள்ளது. இது குஜராத்தில் தொடங்கியது, பின்னர் 2014-ல் தேசிய அளவில் வந்தது, பின்னர் அது மற்ற மாநிலங்களுக்குள் நுழைந்தது.
நான் பொய் சொல்ல மாட்டேன், உண்மையான தரவுகள் இருக்கும்போது மட்டுமே பேசுவேன். இந்த போராட்டம் பாஜக தலைமையையும் தேர்தல் ஆணையத்தையும் வாக்கு திருடுவதற்கு முன் இருமுறை சிந்திக்க வைக்கும்,” என்று ராகுல் காந்தி கூறினார்.