நியூயார்க்:
அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், பணி காலத்தில் ரகசிய அரசுத் தகவல்களை பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2018 முதல் 2019 வரை டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய போல்டன், பின்னர் டிரம்ப் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவர் டிரம்ப் மீது கடும் விமர்சகராக மாறினார். இந்தியாவுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மேரிலேண்டில் உள்ள அவரது வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், பணி காலத்தில் எழுதிய முக்கிய குறிப்புகளை குடும்பத்தினருடன் பகிர்ந்ததாகவும் அமெரிக்க விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2021 ஆம் ஆண்டு ஈரான் தொடர்புடைய ஹேக்கர்களால் அவரது மின்னஞ்சல் கணக்கு தாக்கப்பட்டபோது சில ரகசிய தகவல்கள் வெளிப்பட்டதாக எப்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு எதிரிகள், உளவு சேகரிப்பு முறைகள் மற்றும் ஏவுகணை தாக்குதல் திட்டங்கள் உள்ளிட்ட 1,000 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணங்களை பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என போல்டன் தரப்பு மறுத்துள்ளது.