ஹைதராபாத்: அரசு ஊழியர்கள் பெற்றோரை புறக்கணித்தால், அவர்களின் சம்பளத்தில் 10-15% கழிக்கப்பட்டு, அது நேரடியாக அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். பல்வேறு அரசுத் துறைகளின் பதவிகள் தெலுங்கானா மாநில அரசு ஆட்சேர்ப்பு ஆணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில், ஆட்சேர்ப்பு ஆணையம் மூலம் குரூப் 2 வகைக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 783 ஊழியர்களுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பணி ஆணைகளை வழங்கினார். நேற்று ஹைதராபாத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி கூறியதாவது:- “அரசு ஊழியர்களுக்கு கடமை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு குடும்ப வாழ்க்கையும் முக்கியம். பலர் குடும்ப வாழ்க்கையை சரியாக கவனிப்பதில்லை.

குறிப்பாக, பெற்றோரை புறக்கணிக்கும் பழக்கம் உள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். பெற்றோரை கவனிக்காத ஊழியர்களின் சம்பளத்தில் 10% கழிக்கப்படும். கழிக்கப்படும் தொகை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதன் மூலம், அவர்களின் பெற்றோரும் அரசு ஊழியர்களைப் போலவே மாத சம்பளத்தைப் பெறுவார்கள்.
எந்த சூழ்நிலையிலும், நாம் வந்த பாதையை மறந்துவிடக் கூடாது. பெற்றோர்கள் நமக்கு நங்கூரம். உங்களை வளர்க்க அவர்கள் செய்த தியாகத்தை மறந்துவிடக் கூடாது. அரசு ஊழியர்கள் இதை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான மசோதாவை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.