தென் கொரியா: சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயணம் மேற்கொண்டார். தென்கொரியாவில் நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜின்பிங்க்-டிரம்ப் சந்திப்பு நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நடந்துள்ளன.
தொடர்ந்து சீன அதிபரை சந்தித்து பேசிய பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது:- சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் எப்போதும் சிறந்த உறவை கொண்டுள்ளோம். ஒருவரையொருவர் நாங்கள் நன்கு அறிவோம். ஜி ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர். மேலும் நீண்ட காலத்திற்கு நாங்கள் ஒரு அற்புதமான உறவைக் கொண்டிருக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும். சீனாவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீன செல்கிறேன். அதன்பின் சீன அதிபரும் அமெரிக்கா வருகிறார். சீனாவுக்கு கண்ணி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்து இன்று ஆலோசித்தோம். விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இனி பெரிய தடைகள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.