சென்னை: சேலத்தில் 29-ந்தேதி பா.ம.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடக்கிறது என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2025-க்கு விடை கொடுப்போம், 2026-ஐ வரவேற்போம் என்ற தலைப்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும், மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. மற்றும் அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகர பகுதி நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
மாநில செயற்குழுகூட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் 11.40 மணி முதல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.