தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தால் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழக மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை, ஊர்க்காவல் படையில் பணியில் சேர்வதற்கு 90 நாட்கள் பயிற்சி அளித்து சிறப்பு வகுப்புகளை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடலோர பாதுகாப்புக் குழும கண்காணிப்பாளர்
ரோகித்நாதன் உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக் குழும துணை கண்காணிப்பாளர் முருகன் வழிகாட்டுதலுடன், பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 27 கடலோர கிராமங்களில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு படித்த கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 50 விழுக்காடு மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு, தமிழக அரசால் இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு, மாதம் ஆயிரம் உதவி தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்தை பிப்.15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.