வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.
இது மேலும் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ம் தேதிக்குள், தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டி, நிலவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, கடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 14-ம் தேதி ஒரு சில இடங்களிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 15-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டம், காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதி திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள். 13-ம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான மூடுபனி எதிர்பார்க்கப்படுகிறது. நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 11-ம் தேதி வட தமிழகக் கடலோரப் பகுதிகளிலும், 12-ம் தேதி தமிழகக் கடலோரப் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளிலும், தென் தமிழகக் கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.