சென்னை: காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை குப்பைக் கிடங்காக மாறுவதற்கு மக்கள்தான் காரணம். அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாள் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்பின், மாட்டுப் பொங்கல் 15-ம் தேதி, காணும் பொங்கல் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து தமிழக அரசு வரும் 17-ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்தது. 18-ம் தேதி சனிக்கிழமையும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வருவதால், ஒருவாரம் விடுமுறை. பொங்கல் பண்டிகை என்பது தமிழகம் முழுவதும் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் கொண்டாடும் கலாச்சார விழாவாகும். இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி பல்வேறு சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர்.

இதனால் மெரினா கடற்கரை முழுவதும் குப்பை மேடாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலுக்குப் பிறகு மெரினா கடற்கரையில் குப்பைகள் நிரம்பி வழிவது வழக்கம். இதனை அகற்ற ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த ஆண்டும் காணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் குவிந்ததால், மறுநாள் கடற்கரையே குப்பை மேடாக காட்சியளித்தது.
இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்து மக்களை எச்சரித்துள்ளது. காணும் பொங்கலன்று வழங்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை குப்பைக் கிடங்காக மாறியதற்கு மக்களே காரணம் என்றும், அதனால் வரும் அரசு விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.