அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்கு கனேடிய அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் நேற்று அவர் கூறியதாவது:- அமெரிக்காவும் கனடாவும் புவியியல் அடிப்படையில் அண்டை நாடுகள். கடந்த கால வரலாற்றின் காரணமாக இரு நாடுகளும் நண்பர்களாக உள்ளன. இரு நாடுகளும் பொருளாதாரத்தில் மிக நெருக்கமான வர்த்தக பங்காளிகள்.
இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் இருண்ட காலங்களில் கனடா நெருங்கிய நண்பராக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் நடந்த போர் முதல் கலிபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வரை, நாங்கள் அமெரிக்காவை ஆதரித்து வருகிறோம். புதிய ஜனாதிபதி டிரம்ப் கடந்த கால நட்பை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் கனேடிய பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வர்த்தகப் போரை ஆரம்பித்துள்ளார். எங்களுக்கு வேறு வழியில்லை. அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரியும் விதிக்கிறோம்.
இது அமெரிக்காவை பல்வேறு வழிகளில் பாதிக்கும். இவ்வாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். இதுகுறித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா கூறுகையில், “அமெரிக்காவுக்கு தகுந்த பதில் அளிக்க நிதியமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிக வரி விதிப்பால் பிரச்னைகள் தீராது. இருதரப்பு ஒத்துழைப்பால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்,” என்றார்.
இதுகுறித்து, அமெரிக்க தொழில்துறை வட்டாரங்கள் கூறியதாவது:- பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சி, கார் உதிரிபாகங்கள், மதுபானங்கள் போன்றவை மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை பாதிக்கும். அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரலாம். கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, இரும்பு, அலுமினியம் மற்றும் பிற கனிமங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கனடாவில் இருந்து அதிக அளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இவற்றை ஏற்றுமதி செய்வதை கனடா நிறுத்தலாம். இது அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் தாதுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சீன பொருட்களுக்கு 10 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். அந்த நாட்டிலிருந்து காலணிகள், ஜவுளி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொம்மைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த இறக்குமதியும் பாதிக்கப்படும். இவ்வாறு அமெரிக்க தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிரீன்லாந்து ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த பகுதி தற்போது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என கூறி வருகிறார்.
இதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் முயற்சியை நிறுத்தப்போவதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பாரட் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். கொலம்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பனாமா, 1903-ல் அமெரிக்காவின் ஆதரவுடன் சுதந்திரம் பெற்றது. அந்த நாட்டில் 1914-ம் ஆண்டு அமெரிக்காவின் சார்பில் பனாமா கால்வாய் கட்டப்பட்டது. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக ஆண்டுக்கு 15,000 சரக்கு கப்பல்கள் செல்கின்றன. பனாமா கால்வாய் 1978-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.தற்போது பனாமா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயை மீண்டும் எடுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.