தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பல்கலைக்கழகமான இக்னோ தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் பல்வேறு பாடங்களில் சான்றிதழ், டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 2025 செமஸ்டர் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்விப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in) பிப்ரவரி 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை உறுதி செய்யப்பட்ட பிறகு, தகுதியான மாணவர்கள் மத்திய அரசின் உதவித்தொகைக்கு ஆன்லைனில் (www.scholarships.gov.in/) விண்ணப்பிக்கலாம். சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு, பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.ignou.ac.in) பார்வையிடவும். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.