புதுடெல்லி: தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட தமிழக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோரும், கவர்னர் தரப்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணியும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, ஆளுநரின் சட்ட அதிகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக இரு தரப்பு வாதங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
அதன்படி தமிழக அரசு தரப்பில், ‘அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200, சட்டப் பேரவையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி திருப்பி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு உட்பட்டு ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக எந்த தனிப்பட்ட முடிவையும் ஆளுநர் எடுக்க முடியாது.’ இந்நிலையில், ஆளுநர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவு ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்புரிமையை வழங்கியுள்ளது.
அதன்படி, சட்டசபையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் கவர்னர் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோன்று, அரசாங்கத்தின் மசோதாக்களை இடைநிறுத்துவதற்கு ஆளுநருக்கு முழு சட்ட அதிகாரம் உள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால், அது தானாகவே செயலிழந்துவிடும். மசோதா ஏன் இடைநிறுத்தப்பட்டது என்பதை தனிப்பட்ட முறையில் விளக்க வேண்டிய அவசியமில்லை.
இடைநிறுத்தப்பட்ட மசோதா, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அத்தகைய மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாகாண வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எங்களுக்கு பொருந்தாது. எனினும், தேவைப்பட்டால், தமிழக ஆளுநருக்கு எதிரான இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது அவரது அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.