ராமேஸ்வரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சேசுராஜா, வியாகுளம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மந்த்ரோ, கோபால் ஆகியோருக்கு சொந்தமான 5 மோட்டார் படகுகளை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, அதில் இருந்த 32 மீனவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 32 மீனவர்களுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு, ஏலத்தை நிறுத்தக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்தில் 600-க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.